தக்கனபிழைத்து வாழும் காதல்

14 Feb

எழுதிய கவிதைகளோ நூறை தாண்டாது….
ஆனால், உன் பெயரை எழுதினேன் ஒவ்வொரு முறையும் எண்ணாது…..

என் இதயம் என் உடலெங்கும் குருதியை அனுப்பும் முன்,
நுரையீரல் தரும் உயிர்வளியை கலக்கிறதோ இல்லையோ,
உன் நினைவுகள் தரும் காதலை கலந்து விடுகிறது……

நீ கண்ணீரோடு அன்று விடைபெற்றதாலோ என்னவோ,
நான் இன்று கண்ணீர் கொள்கிறேன் உன்னை நினைத்து……

நம்மை பிரிக்க முடியாதபடி இணைக்கத்தான்
இப்போது இந்த தனிமை என்றால் தாங்கிக் கொள்கிறேன் இதை….

தூரம் பிரித்திருக்கலாம், ‘ஒளி அளவளாவல்’ இணைத்திருக்கலாம் நம்மை…..
விக்கல்கள் வராமலிருந்திருக்கலாம், குறுஞ்செய்திகள் வந்துகொண்டுத்தான் இருக்கிறது…
கனவுகள் வராமலிருக்கலாம், கனத்த மின்னஞ்சல்கள் வந்து கொண்டுத்தான் இருக்கின்றன…

காதலும் தன்னை புதுப்பித்து கொண்டுத்தான் இருக்கின்றது…..
பரிணாம வளர்ச்சியின் ‘தக்கனபிழைத்தல்’ காதலுக்கும் பொருந்தும்….

Tags: , , , , , , , ,

நட்பு போர்வை போர்த்திய காதலன் நான்

21 Jan


யதார்த்தத்தின் நிழலில் இளைப்பாறி கொண்டிருந்த என்னை,
உன் கனவுகளை நோக்கி ஓட சொல்கிறாய்…….

சிறகுகளும் தருகிறாய் நான் கேட்காமலே….
பிடுங்கியும் கொள்கிறாய் என்னை கேட்காமலே….

சாலையை கடக்கும் போது கேளாமல்,
என் கரம் பிடித்து வந்தாய்….

வாழ்க்கையை கடக்க, நான் கரம் நீட்டியும்,
என் கரம் பற்ற யோசிக்கிறாய்…

உன்னை பார்த்தவுடன் தோன்றுவது,
கவிதை… உனக்கு பிடித்தது

நீ பிரியும் போது தோன்றுவது,
காதல்… எனக்கு பிடித்தது

நீ என்னிடம் கொண்டது வெறும் நட்பாயினுமே,
நான் ஒரு நட்பு போர்வை போர்த்திய காதலன் தான்….

Tags: , , , , , , ,

தினமும் என் மனதில் குறும்படமாய் நீ

3 Jan

உன் பகல் நேர பொழுதுகளையெல்லாம் என் கண்கள்
படம் பிடித்து தான் குறும்படமாய் காண்பிக்கிறது என் மனது.
இரவில் உறங்கும் முன்…..

எங்கேயாவது உன் பெயரை பார்த்தாலோ, கேட்டாலோ,
என் மனத்திரையில் உன் படங்கள், உறையும் காட்சிகளாய்…

விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் போல தான் இப்போதெல்லாம்
என் கனவுகள், இடைவேளை இன்றி தொகுத்து வழங்கப்படுகிறது
என் மனதால்…….

நீ எங்கே என்று நாலாபுறமும் நோட்டம் விட்டு
உன் கண்களை கண்டுபிடித்து தான்,
இன்றைய செய்திகளை வாசிக்கிறது என் கண்கள்….

இருந்தும் அடுத்த கட்டத்துக்குள் நுழையாமலே,
நம் பார்வை பரிவர்த்தனைகள் ஒரு குடும்ப நெடுந்தொடர்
போல தான் தொடர்கிறது என்றுமே அந்நாளின் இறுதியில்…..

Tags: , , , , , , , , , , ,

காதல் – நட்பின் பரிணாமமே

30 Oct


கண்கள் இமைக்க மறுத்தது…
நினைவுகள் மறக்க முடியாதவையானது…
தவிப்புகள் தவிர்க்க இயலாததானது….

கரங்கள் பிரிக்க முடியாதவையானது….
காதல் அத்தியாவசியமானது….
நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ….

நீண்ட நாட்களாக நெருங்கிய நம் நட்பில்
காதல் என்ற துரு ஏறுமோ? இல்லை
நட்பு தான் சற்று இடைவேளை கேட்குமோ?

எல்லாமே தன்னிலை மாறும்,
ஆனால், நீ என்றுமே நட்பாகவே
எனக்கு போதும் என்பவள் நீ…

நாம் நண்பர்களாகவே தொடர்ந்த போதும்,
காதல் தானே நம்மை தொடர்ந்தது…..

காதல் நம் வசப்படாத நிலையிலும் நாம் காதலின்
வாசலில் தானே காத்து இருந்தோம்!!!!!!!!

மனிதன் பரிணமித்து தான் வந்தான் என்றால்,
நம் காதலும், நட்பின் பரிணாமமே!!!!!
என்று ஓரிரு காரணங்களுடன் நான்

இத்தனை நாட்களாய், அருவமாயிருந்த என் காதலியை,
உருவமுற்ற என் தோழியான உன்னிடத்தில் பார்க்கிறேன்
அதில் தவறேதும் இல்லையே!!!!!!!!

தவேறதும் இருந்தால் சொல்,
மாற்றி கொள்கிறேன் என் காதலை, காதலியை அல்ல……

Tags: , , , , , , , , , ,

நீ மறைத்து வைத்த பொய் மீன்கள்

15 Oct

தினமும் விழிகளில்
மை பூச மறந்தாலும்
பொய் பூச மறப்பதில்லை நீ -
அதுவும் உனக்கு அழகென்ற ஆணவத்தில்…

என்னை ரசித்திடும் நேரத்தில்
அப்பொய் திரை சரிந்தாலும்
சட்டென்று சரி செய்து கொள்வாய் -
சில நொடிகளே எனினும்
கவனிக்க தவறுவதில்லை நான்…

என்னை வெறுப்பதாய் சொன்னதும்,
மூண்ட என் சோக மௌனம் கண்டு
உன் கண்கள் கலங்குவதுண்டு -
எத்தனை முறை தான் சாதிப்பாயோ
அதை கண்களில் தூசி என்று..

கூச்சமின்றி உன் நண்பர்களின்
கைகோர்த்து செல்லும் நீ
என்னுடன் கை குலுக்கவே
நடுக்கம் கொள்கிறாய் -
தொடுதலால் உன் உணர்வுகள் அறிந்திடுவேன் என்றோ….

உன்னையும் மறந்து
என்னோடு சிரித்ததற்கு
கடிந்து கொள்ளாதே உன்னை….
நீ நடித்தாலும் இயல்பாய் நடந்தாலும்
உண்மையை நான் அறிவேன் …

வலையில் மாட்டிய மீன்களாய்
உன்னுள் தவிக்கும் உன் பொய்களுக்கு
விடுதலை வழங்கடி பெண்ணே
நான் சிக்கி கொள்வேன் உன்னிடம்
அதற்கு பதிலாக…!!!!

 

Tags: , , , , , , , ,

மங்காத்தா – சிறு பார்வை

28 Sep


மங்காத்தா ஒரு முற்றிலும் மாறுப்பட்ட முயற்சி இயக்குனருக்கும், அதில் நடித்திருக்கும் அஜீத்திற்கும். மற்றபடி மற்ற நடிகர், நடிகையர்கள் வந்து செல்கிறார்கள். இந்த படத்தில், அஜீத்தின் கதாபாத்திரம் அவரின் நடிப்பிற்கு வாலி, வில்லன், வரலாறு மற்றும் பில்லா உடன் சேர்ந்த மேலும் ஒரு மைல் கல். மிகவும் யதார்த்தமான வசனங்கள், மொக்கைகள், எல்லாரையும் கலாய்க்கும், வில்லனாக மாறி மிரட்டும் அஜித்….. ஒரு ‘தல’ ரசிகனாக இருந்து மங்காத்தாவை படைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. அஜீத்திற்கு அடுத்தபடியாக அதிகமாக எதிர்ப்படுவது பிரேம்ஜி தான்…. இருவரும் சேர்ந்து போடும் மொக்கைகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். குடிக்கும் போது அடிக்கும் தத்துவங்கள் ரசிக்கும் ரகம். கார் மற்றும் பைக் ஸ்டன்ட் காட்சிகளில் அஜித்தின் கார் பந்தய திறமைகள் பளிச்! அஜீத்தின் 50 ஆவது படம் இதை விட சிறப்பாக அமைய முடியாது. மங்காத்தா கண்டிப்பாக ‘பாக்ஸ் ஆபீஸ்’ உள்ளே

Tags: , , , , , , ,

பற்றி கொள்ளட்டும், காதல்…..

12 Sep

ஊடல் கொண்டு பிரிந்த மேகங்களின்
கண்ணீரல்ல மழைத் துளிகள்..
தேடல் வென்று சேர்ந்த மேகங்களின்
காதல் கிளர்ச்சித் துகள்கள்…

கோடி தூரம் கடந்து வந்தும் கரையாமல்..
அன்று நனைந்த பூமி இன்னும் உலராமல்..

விழுந்தன எல்லாம் -
அதிகாலை பனியாய் சில மலர்களில்,
அழகான காதலாய் சில மனங்களில்..

பனி காய்ந்தாலும்
அதன் தடம் மலர் இதழ்களில்,
மலர் வாடினாலும்
பனித் துளிகள் புது மலர்களில்..

நிலை மாறி வழி மாறினாலும்
காதலின் தடம் மன அறையில்,
மனம் மறைத்து, விட்டுச் சென்றாலும்
காதல் பற்றிக் கொள்ளும் அடுத்த தலைமுறையில்..

Tags: , , , , , , ,

காதலை இசைக்க காத்திருக்கிறேன்

23 Aug



உன்னை காணாத தருணங்களில்
உடைந்து விடுவதில்லை நான் -
உன்னை கண்ட பொழுதுகளை எண்ணி
உருகிடவே நேரம் போதாததால்…

நீ புன்னகைத்தால்
மயங்காமல் வருந்துகிறேன்-
உன் மௌனங்களின் அழகிற்கே
சிதைந்து போனவன்
இதனால் என்னாவேனோ என்று…

நிதமும் உன்னிடம் தெறிக்கும் அழகுகளை
என்னுள் சுமந்து சுவைப்பதே போதும்
நானும் அழகாகிவிடுவேன் போலும்..

உன்னை காண்பேன் என்ற எண்ணமே
தித்திக்க வைக்கும்
நான் தனித்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும்..

என் ஏக்கங்களின் தயக்கங்களின்
சுமை பெருகப் பெருக
இன்னும் சொல்லாத என் காதலில்
சுவை கூடி வழிந்தோடும்..

மூங்கில் காட்டின் தீ போல
உரக்க சொல்வதல்ல காதல்,
மூங்கிலின் காதில் சொல்லும்
இசையின் ரகசியமாய்,
வாசிக்க காத்திருக்கிறேன்…!!!

Tags: , , , , , , ,

சிலரின் காதலும் பலரின் காதலும்

30 Jul

காதலை வெறுத்து ஒதுங்கியவர்கள் சிலர்…
காதலை விரும்பி ஏற்றவர்கள் பலர்…..

காதலை விற்றவர்கள் சிலர்….
காதலை தொலைத்தவர்கள் பலர்….

காதலை வென்றவர்கள் சிலர்…..
வென்ற காதலை கொன்றவர்கள் பலர்……

காதலை காமம் என நம்பியவர்கள் சிலர்….
காமத்தை காதலென எண்ணி ஏமாந்தவர்கள் பலர்….

காதலை ஊரறியாமல், கள்ளத்தனமாய் செய்தவர்கள் சிலர்….
கள்ளக்காதலை ஊரறியாமல் அரங்கேற்றியவர்கள் பலர்…..


காதலை வாழ்கையில் நிறுத்தி சென்றவர்கள் சிலர்….
வாழ்க்கையை காதலில் முடித்து கொண்டவர்கள் பலர்…

விவரமறியா வயதிலிருந்து காதல் கொண்டவர்கள் சிலர்…..
வாலிப வயதை தாண்டியும் காதல் மன்னனாய் இருந்தவர்கள் பலர்….

பல காதல்களை கொண்டவர்கள் சிலர்…..
ஒரே காதலை செய்தவர்கள் பலர்….

காதலை காதல் செய்தவர்கள் சிலர்…
காதலியை காதல் செய்தவர்கள் பலர்….

காதலை, மனைவி அமையும் வரை, அருவமாகவே வைத்திருந்தவர்கள் சிலர்….
காதலை, மனைவி ஆகும் வரை, காதலியின் உருவத்தில் பார்த்தவர்கள் பலர்….


காதல் தோல்வியை சுவைத்து பக்குவமடைந்தவர்கள் சிலர்….
காதலில் வெற்றி பெற்றும் பக்குவமடையாதவர்கள் பலர்…..

விளையாட்டாய் காதலை தொடங்கியவர்கள் சிலர்….
காதலை விளையாட்டாய் முடிப்பவர்கள் பலர்….

காதலை கல்யாணமாய் மாற்றியவர்கள் சிலர்….
கல்யாணத்தை காதலாய் ஆக்கியவர்கள் பலர்….

நட்பில் காதலை கண்டவர்கள் சிலர்…
காதலை நட்பில் முடித்தவர்கள் பலர்….

Tags: , , , , , , ,

மழை நின்ற பின்னும்

12 Jul


மழை நின்ற பின்னும்
நனைவதாய் கை விரித்தாடும்
சிறு பிள்ளையென
என் இதயம்
நீ சென்ற பின்னும்
உன் நினைவுகளில்…!!

செம்மணலாய் பரவி கிடக்கும்
என் காதல் மீது
உன் இதயப் பாதங்களை
ஈரம் கொண்டு உலவ விடு..
பாதங்களில் ஏறிடும் செந்நிறத்தோடு
என் காதலும் ஏறட்டும்
உன் இதயத்தில்..!!!

Tags: , , , , , ,

காதல் வாங்கலையோ, காதல்

22 Jun


அன்று , “காதல் வாங்கலையோ, காதல்” என்று பல பேர் திரிகையில் ….
“பழைய நட்புக்கு, புத்தம் புது காதல்” என்று நானும் கிளம்பியிருந்தேன் …..

காதல் நட்பை விட கவர்ச்சியானது என,
காதலில் வெற்றி என்பது மிகவும் சுவையான சம்பவம் என,
சிறிது காலத்தில், நட்பு பொலிவிழந்து விடும் என,
என் கைவசம் காரணங்கள் ஆயிரம்….

பேரம் என்று வந்தாலே,
பெண்கள் சாமர்த்தியசாலிகள் தான்.
உன்னிடமிருந்த என்னுடனான மிக சிறந்த நட்பை,
என் காதலுக்காக கொடுத்தாய்….

இன்று, இந்த காதலை ஏன் வாங்கி தொலைத்தோம் என்று நீயும்,
நம் நட்பை ஏன் விற்று தொலைத்தோம் என்று நானும்,
அவ்வப்போது, எண்ணும் போது, வா தோழியே…..

அடுக்கி வைக்கப்பட்ட குடுவைகளை ஒவ்வொன்றாய் எடுத்து பழைய
நட்பை சற்றே நுகர்ந்து பருகலாம்!

பல நாட்கள் சேர்த்து வைத்திருந்த மதுவை போல…..

பல நாட்கள் முன்பு நட்பின் நினைவுகளையெல்லாம் சேகரித்து,
அடைத்து வைத்து விட்ட அந்த குடுவைகளிலிருந்து…

ஆதலால் நட்பை விற்று காதலை வாங்குவீர்
சரியான நபரிடம்…….

Tags: , , , , , , , , , , , , ,

காதல் வாங்கினால், காமம் இலவசம்

4 May

முதல் முறை இல்லையெனினும் அப்புறமாக
வந்து ஒட்டி கொண்டது தான் காமம்…

என் காதல் எப்போதுமே சிறிது காமம் கலந்தே
ஈயப்படுகிறது, உனக்கும் பிடித்திருந்ததால்….

காலங்களை கடத்தி சென்றது உன் காதல்,
காதலை கடத்தி சென்றது என் காமம்….

கண்ணுக்கு தெரியாத சிறு சிறு காம துகள்கள் கலந்த
காதலைத் தான் நாம் சுவாசித்தும், குடித்தும், கடந்தும் வந்தோம்…..

கடந்து வந்த சிலர் காமத்துடன் மறைந்து போயும், சிலர்
காதலுடன் கரைந்து போயும் இருந்தனர்…..

கடைசி வரை, காதல் வழி பிறழாதவர்கள் தாம் வரம் பெற்று வந்தவர்கள்….

Tags: , , , , , , , , ,

Follow

Get every new post delivered to your Inbox.